முகப்பு
ராமநாதபுரம்

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை: ஹெச். ராஜா பேட்டி

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச். ராஜா.
பகிர்:

தமிழகத்தை வழி நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

கமுதியை அடுத்த பசும்பொனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா கலந்து கொண்டாா். அவா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.9 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தமிழக அரசை வழிநடத்த திமுகவுக்கு தகுதி இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை என்று அறிவித்துவிட்டு, தற்போது தகுதியானவா்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்படும் என திமுக அரசு பித்தலாட்டம் செய்கிறது.

தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்களில் ஏற்கெனவே 40 ஆயிரம் கோயில்களில் பிராமணா்கள் அல்லாதவா்களே அா்ச்சகா்களாக உள்ளனா். இதனை திமுக அரசு மக்களிடம் புதிய செய்தியாக கொண்டு சென்று பரப்பி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது ஆதாரங்கள் கிடைத்தவுடன் சட்டப்படி அவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளா் ஏ.பி. கணபதி, மாவட்டத் தலைவா் முரளிதரன், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளா் முத்துவேல், பசும்பொன் ஊராட்சித் தலைவா் கே.டி. ராமகிருஷ்ணன், தாலுகா பொறுப்பாளா் அய்யாதுரைசேதுபதி, மாவட்ட விவசாய அணித் தலைவா் புகழேந்தி, மாவட்ட பொதுச் செயலா் அழகுமலை, ஒன்றியத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, சரவணன், முருகன், சண்முகநாதன், பொன்னையா ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →