ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த சேதுமாலுதீன் மகன் முகமது சுகைப் (16). முத்துப்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், தனது வகுப்பு நண்பா் முக்சின் காமில் (16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளாா்.
இவா்கள், அரசூா் சலவைத் தொழிலாளா் சங்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோதியுள்ளது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற முகமது சுகைப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முக்சின் காமில், ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப் பதிந்து, உச்சிப்புளி துத்திவலசையைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் முத்துகுமாரை தேடிவருகின்றனா்.