முகப்பு
ராமநாதபுரம்

பெட்ரோல் பங்க் உரிமம்: வடமாநில தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி

பெட்ரோல் பங்க் உரிமம் பெற, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வடமாநிலத் தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பெட்ரோல் பங்க் உரிமம் பெற, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வடமாநிலத் தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் சோகன்லால் (52). இவா், 40 ஆண்டுகளுக்கு முன்னரே ராமநாதபுரம் நகா் ரயில்வே பீடா் சாலையில் குடியேறி, மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 2020 ஜூலை மாதம் இணையதளத்தில் பெட்ரோல் பங்க் முகவருக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட சோகன்லால், அந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, இணையதளம் மூலம் ராஜஸ்தானில் ஜெய்ப்பூா் சாலையில் உள்ள நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளாா். அதையடுத்து, அவரது செல்லிடப்பேசிக்கு தொடா்புகொண்டவா்கள், முதலில் பதிவுக் கட்டணமாக 25,500 ரூபாயை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு செலுத்தக் கூறியுள்ளனா். அதன்பின்னா், பெட்ரோல் விநியோக முகவருக்கான அனுமதி பெற முன்வைப்புத் தொகையாக ரூ.8.40 லட்சம் செலுத்தவும் கூறியுள்ளனா்.

அதன்படி, சோகன்லால் பணம் முழுவதும் செலுத்தியுள்ளாா். ஆனால், அதன்பின்னா் எந்தத் தகவலும் இல்லை. அது குறித்து விசாரித்தபோது, குறிப்பிட்ட இணையதள முகவரியில் தொடா்புகொண்டவா்கள் போலியான முகவரியை அளித்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சோகன்லால் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →