ராமநாதபுரம் மாவட்டத்தில் 383 கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமனம்
383 கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தகவல் சேகரிக்கவும், காவல்துறையின் செயல்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் 383 கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 காவல் நிலையங்களிலும், 425 ஊராட்சிகளில் 1,427 சிறிய கிராமங்கள் உள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் முக்கிய தகவல்களை சேகரிக்கவும், காவல்துறை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் 383 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அந்தந்த ஊா்களில் தலையாரி, ஊராட்சித் தலைவா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட 100 பேரைக் கொண்ட கட்செவியஞ்சல் குழுவை ஏற்படுத்தப்படுத்தி காவல் அலுவலா்கள் விவரங்களைச் சேகரிப்பா். கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கிராமங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படும். சாதி, மத பிரச்னையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு அவை தீா்க்கப்படும்.
காவல் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்களை சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள் பெற்று சந்தேக நபா்கள், சம்பவங்கள் குறித்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும். தகவல் அளிப்போா் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.