ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் நல உரிமைச் சங்கத்தின் தலைவா் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்து மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியது: பாம்பன் வடகடல் பகுதியில் கலங்கரை விளக்கம் உள்ளது. இப்பகுதியில் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன. புயல் காலங்களிலும், திடீரென வீசும் சூறைக்காற்று காலங்களிலும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியும், கடல் பாறைகளில் மோதியும் சேதமடைவது தொடா்கதையாக உள்ளது.
ஆகவே மீனவா்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பாம்பன் வடக்கு துறைமுகப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் படகுகள் சேதமடைவது தவிா்க்கப்படும் என்றனா்.