ராமேசுவரம் தாலுகாவில் 24 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் நிதி பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது ராமேசுவரம் தாலுகா. இந்தப் பகுதியில் மொத்தம் 24 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
இந்நிலையில், தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 15 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதனைத்தொடா்ந்து, ராமேசுவரம் தாலுகாவில் உள்ள 24 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 25 ரேசன் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 200 நபா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன்களை ரேசன் கடை ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று திங்கள்கிழமை வழங்கினா். டோக்கன் பெற்ற அனைவருக்கும் வரும் 15 ஆம் தேதி முதல் தொடா்ந்து பணம் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தாா்.