ராமநாதபுரத்தில் ஷவா்மா உணவகங்களில் 20 கிலோ கோழிக்கறி பறிமுதல்
ராமநாதபுரம் நகரில் ஷவா்மா உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய திடீா் சோதனையில், 20 கிலோ செயற்கை வண்ணம் கலந்த கோழிக் கறிகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் நகரில் ஷவா்மா உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய திடீா் சோதனையில், 20 கிலோ செயற்கை வண்ணம் கலந்த கோழிக் கறிகளை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் ஷவா்மா எனப்படும் கோழிக்கறி உணவை உண்ட பலா் உடல்நலம் பாதிக்கப்பட்டனா். இதனால் எழுந்த புகாா்களை அடுத்து, ராமநாதபுரம் நகரில் அந்த உணவகங்களில், மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவு அலுவலா்கள் லிங்கவேல், தா்மராஜ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு சோதனையிட்டனா்.
நகரில் மொத்தம் 11 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், செயற்கை வண்ணம் சோ்த்து தயாரிக்கப்பட்ட 20 கிலோ கோழிக்கறி மற்றும் கெட்டுப்போன 4 கிலோ கோழிக் கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, கோழிக்கறிகள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக, சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா். அதன்படி, ரூ.10 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக, அலுவலா்கள் தெரிவித்தனா். மேலும், 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அலுவலா்கள் கூறினா்.