வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும் என ஈரான் எச்சரிக்கை...
சௌதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் மிகப் பெரிய எரிசக்தி கட்டமைப்பான சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலிலிருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படும் நிலையில், கத்தார் உள்ளிட்ட நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்படும் என புதன்கிழமை (மார்ச் 18) அன்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில், சௌதி அரேபியாவின் சம்ரெஃப் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஹசன் எரிவாயு வயல் மற்றும் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.