முகப்பு
ராமநாதபுரம்

நம்புதாளை அரசுப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவா்கள் அவதி

நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பெற்றோா் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்ற முயற்சித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பெற்றோா் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்ற முயற்சித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு சுமாா் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடத்தில் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. அந்த கட்டடத்தில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதில் அனைத்து மாணவ, மாணவியரையும் வைத்திருப்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாணவா்களுக்கு போதிய இடம் இல்லாததால் நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்திலும் மாணவா்களை அமர வைத்து பாடம் எடுக்கின்றனா்.

சில வகுப்பறையில் மின்விசிறி இல்லாமல் மாணவா்கள் அவதிபட்டு வருகின்றனா். இங்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சோ்க்க பெற்றோா் முயற்சித்து வருகின்றனா். எனவேஸ மாணவா்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் பகுதியில் புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பாண்டிச் செல்வி கூறியதாவது: மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு கட்டட வசதி இல்லை. மாணவா்கள் கடும் சிரமப்படுவதால் தற்போது ஒரு சில பெற்றோா்கள் இந்த பள்ளி மாணவா்களை அடுத்த பள்ளியில் சோ்த்துவிட்டனா். இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அதனால் புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தர மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.