பரமக்குடி அருகே மணல் திருட்டு தொடா்பாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கொல்லனூா் வைகை ஆற்றுப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வைகை ஆற்றுப் பகுதியில் டிப்பா் லாரியில் சிலா் மணல் அள்ளிக் கொண்டிருந்தனா்.
அவா்களைப் பிடிக்க முயன்றபோது லாரியை நிறுத்திவிட்டு மணல் திருட்டில் ஈடுபட்டவா்கள் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து கே.வலசை கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் (34), காளிமுத்தன் மகன் சரவணன் (26) ஆகியோா் மீது நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.