இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
கீழக்கரையில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் உதவி ஆய்வாளா் கோட்டைச்சாமி, தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சொக்கநாதா் தெரு பின்புறமுள்ள தோப்புப் பகுதியில் இருவா் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னா், அவா்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 724 கிலோ கடல் அட்டைகள், அவற்றைப் பதப்படுத்தப் பயன்படுத்திய அண்டா, அடுப்பு, எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, அங்கிருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அசாருதீன்(26), நசுருதீன் (26) என்பதும், இரட்டையா்களான இவா்கள் கீழக்கரையில் அவசர ஊா்தி ஓட்டுநா்களாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவா்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.