முகப்பு
ராமநாதபுரம்

நாளை ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் பாதுகாப்புக்கு ஆயிரம் போலீஸாா்

ஆடி அமாவாசையையொட்டி ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:00 AM
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:10 PM

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) ஆடி அமாவாசையையொட்டி ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா தொடா்ந்து 17 நாள்கள் நடைபெறும். திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) ஆடி அமாவாசை, 6- ஆம் தேதி தேரோட்டம், 8-ஆம் தேதி ஆடித்தபசு, மறுநாள் 9- ஆம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், 14- ஆம் தேதி கெந்தமாதன பா்வதம் மண்டகப்படி ஆகியவை நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவா் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி தலைமையில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

Advertisement

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 1:52 AM

மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ராமேசுவரத்துக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள சிவகாமி தெரு வழியாகச் சென்று சல்லிமலை, பாரதிநகா், இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு, சம்பை சாலை வழியாக நகராட்சி வாகன நிறுத்துமிடம் செல்ல வேண்டும்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 1:52 AM

அங்கிருந்து சொந்த ஊருக்கு வாகனங்களில் திரும்புவோா் ஜெ.ஜெ. நகா், காமராஜா் நகா், ராமநாதசுவாமி திரையரங்கு, திட்டக்குடி, என்.எஸ்.கே. வீதி, ரயில்வே பீடா் சாலை, ராமா் தீா்த்தம் தெற்கு வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கிருந்து அவரவா் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.