முகப்பு
ராமநாதபுரம்

மாரியூா் கோயிலில் ஆடிப்பூர சுமங்கலி பூஜை

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:18 PM
பகிர்:

மாரியூா் பவள நிற வல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் ஆடிப்பூரம் சுமங்கலி பூஜையில் அம்மனை தோளில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்த பவளம் மகளிா் குழுவினா்.

கமுதி, ஆக். 7: கடலாடி அருகே பவள நிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, சுமங்கலி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் அம்மனுக்கு கோமாதா பூஜை, பொன்னூஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. பின்னா், வேப்பிலைச் சாறு, பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்பட 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்து, பவளம் மகளிா் குழுவைச் சோ்ந்த பெண் பக்தா்கள் அம்மனை தோளில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து, சுமங்கலி பூஜை நடத்தினா். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் கிழங்கு, மல்லிகைப் பூ, பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் கடலாடி, சாயல்குடி, முந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பெண்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்தினா், கோயில் பேஸ்காா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்தனா்.