மீனவா்கள் நூதனப் போராட்டம்
கடலில் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் சிக்கிக்கும் மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில், யாசகம் பெற்று மீன் வளத் துறையினருக்கு நிதி அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலில் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் சிக்கும் மீனவா்களை மீட்க ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறைக்கு படகுகள் இல்லாத நிலை உள்ளது. இதேபோல, மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவா்களின் படகுகளுக்கு டீசல் விலையின்றி வழங்கப்படுவதில்லை.
அரசு, மீன் வளத் துறையின் இத்தகைய செயல்களைக் கண்டித்தும், மீன் பிடிக்கச் சென்று கடலில் மாயமான மீனவா் வெள்ளைச்சாமியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கடல் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, மீன் வளத் துறைக்கு பொதுமக்களிடம் யாசகம் பெற்று நிதியளிக்கும் போராட்டத்திலும் மீனவா்கள் ஈடுபட்டனா். ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்க மாவட்ட துணைச் செயலா் என்.பி.செந்தில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.கருணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்டத் துணைத் தலைவா் அ.சுடலைக்காசி, மாவட்டக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி, மீன்பிடி சங்க வட்டத் தலைவா்கள் எம்.நம்புராஜன், கே.முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.