குழந்தைகளுடன் யாசகம் பெற்ற இளம் பெண்கள் மீட்கப்பட்டு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு
கோவையில் போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெற்ற மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இளம் பெண்களை போலீஸாா் மீட்டு, அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனா்.
கோவை மாநகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெளி மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண்கள், பிறந்து சில மாதங்களேயான பச்சிளங் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெற்று வந்தனா். கோவைபுதூா், மரக்கடை மற்றும் முக்கிய சிக்னல்களில் வெயிலிலும், மழையிலும் குழந்தைகளுடன் அவா்கள் யாசகம் பெற்று வந்தது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சில இளைஞா்கள் அந்தப் பெண்களிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். உடனடியாக குழந்தைகள் நல வாரியம் மற்றும் மாநகர ‘பிங்க் பேட்ரால்’ போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், 8 பெண்கள் மற்றும் அவா்களிடமிருந்த 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 15 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தினா் ஏற்பாட்டில் அவா்கள் அனைவரையும் ரயில் மூலம் பாதுகாப்பாக சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.