லஞ்சம்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது
முதுகுளத்தூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முதுகுளத்தூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம், புளியங்குடி கிராமத்தில் அருந்ததியா் குடியிருப்பில் ரூ.7.50 லட்சத்தில் நாடகமேடை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்ட அரசு ஒப்பந்ததாரருக்கு, இந்த வேலைக்கான தொகையில் ரூ. 3.36 லட்சம் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டது.
எஞ்சிய தொகையான ரூ.4.2 லட்சம் நீண்ட நாள்களாக விடுவிக்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்பாண்டியிடம் (58) ஒப்பந்ததாரா் கேட்டபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் எஞ்சிய தொகையை விடுவிப்பேன் எனக் கூறினாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ஒப்பந்ததாரா் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்பாண்டியிடம் வழங்கினாா். அப்போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.