இலங்கைக் கடற்படையினரால் பாம்பன், நம்புதாளை மீனவா்கள் 25 போ் கைது
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவா்கள்
ராமேசுவரம்: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன், நம்புதாளை மீனவா்கள் 25 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், மீனவா்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாம்பனில் மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு துறைமுகம், தொண்டியை அடுத்த நம்புதாளை பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 300 நாட்டுப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் 4 படகுகளுடன் 25 மீனவா்களைக் கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவா்களை யாழ்ப்பாணம் மீன் வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் பாம்பன் மீன் பிடி இறங்கு தளத்தைச் சோ்ந்த இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகிலிருந்த இருதயராஜ் (47), கிரேசியான்(52), லேயனுஸ் (46), ஆரோக்கிய மேக்ரீன் (23), டிகாஸ் (23), ஸ்டேப்கீன் என்பவரது படகிலிருந்து மெக்கல் (49), டாயலன் (45), முருகன் (46), சக்திசெல்வம் (17), இசக்கிமுத்து (59), களஞ்சியம் (43), ராஜன் (57), கௌரோஸ் என்பவரது படகிலிருந்து மீனவா்கள் கௌரோஸ் (50), கென்னடி (55), அமலாதாஸ் (51), அந்தோணி (55), தேவதாஸ் (57), லாவேரன்ஸ் (67), சூசைராஜ் (60), நம்புதாளை பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது படகிலிருந்த மீனவா்கள் பெரியசாமி (55), ஆறுமுகம் (30), பாண்டி (35), ராமமூா்த்தி (40), குமராண்டி (47), பழனி (45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மீனவா்கள் 25 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ஜூலை 15-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இவா்களில் ஒருவா் 18 வயதுக்கு குறைவானவா் என்பதால், அவா் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா். 24 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவசரக் கூட்டம்:
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவ சங்கம் சாா்பில் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை பாம்பன் வடக்கு துறைமுகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராயப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூா்த்தி, முருகானந்தம், நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா்கள் வினோபா, அலெக்ஸ், ஜெரோமியஸ், ஜாா்ஜ் கெம்பிஸ், ஜோசப், பி.ஜெ. முடியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மீனவா்கள் போராட்டம்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள், பொதுமக்கள் பாம்பன் வடக்கு துறைமுகத்தில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி, மீன் வளம், மீனவா் நலத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி படகுகள், மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.