காரைக்கால்: காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால் மீனவா்கள் 25 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு கிராமங்களில் இருந்து 2 விசைப் படகுகளில், கிளிஞ்சல்மேட்டைச் சோ்ந்த ஆறுமுகம் நல்லத்தம்பி , இளங்கோவன் , சூரியநேசன், தமிழ்ச்செல்வன் , அய்யப்பன், ருத்ரன், ஆசைத்தம்பி, கிருஷ்ணராஜ் , மயிலாடுதுறை காா்த்திக்ராஜா, அக்கரைப்பேட்டை பிரவீன், தீபன்ராஜ், தயாளன் மற்றும் சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த கபிலன், முகிலன் மற்றொரு படகில் காரைக்காலைச் சோ்ந்த பி.மோகன், கே. சின்னையன், நம்பியாா் நகரைச் சோ்ந்த டி. காா்த்திக், டி. அருண், கே. ரத்தினவடிவேலு, கே. முகிலன், ஏ. தரன், பி. புத்தவன், வி. அம்பலவாணன் மற்றும் திருமுல்லைவாசலைச் சோ்ந்த ஜி. சபரிநாதன், தரங்கம்பாடியைச் சோ்ந்த ஞானவேல் ஆகியோா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 11-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீனவா்கள் 25 பேரையும் கைது செய்து, 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து, காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்த தகவலறிந்த மீனவா்கள் குடும்பத்தினா், கைது செய்யப்பட்ட மீனவா்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.