முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் விரைவில் சோதனை ஓட்டம்

Updated On : 11 ஜூலை, 2024 at 9:33 PM
பாம்பன் புதிய ரயில்வே பாலப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த ரயில்வே உள்கட்டமைப்புக் குழு உறுப்பினா் அனில்குமாா் கண்டேல்வால்.
பகிர்:

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் இன்னும் 2 மாதங்களில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே உள்கட்டமைப்புக் குழு உறுப்பினா் அனில்குமாா் கண்டேல்வால் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தொலைவுக்கு கடலுக்குள் கப்பல்கள் வந்து செல்லும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் பாதையிலிருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பாம்பன் பழைய பாலத்தின் உறுதித்தன்மை குறைந்த நிலையில், ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது, புதிய ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் ரூ. 80 கோடியில் நடைபெற்று வரும் ரயில் நிலையப் பணிகளை ரயில்வே உள்கட்டமைப்புக் குழு உறுப்பினா் அனில்குமாா் கண்டேல்வால் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பாம்பனில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில்வே பாலம் பணியை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், பாம்பனில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில்வே பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தன. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இன்னும் 2 மாதங்களில் புதிய ரயில்வே பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும். இதன்பிறகு, ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும்.

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் போக்குவரத்தைத் தொடங்க தண்டவாளம் அமைக்கும் பணிக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று, ராமேசுவரம்-தனுஷ்கோடி வரையிலான ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

பாம்பன் பழைய ரயில் தூக்குப் பாலம் மிகவும் பழைமையானது. அந்தப் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்துள்ளதால், புதிய பாலம் திறக்கப்பட்டு கப்பல் கடந்து செல்லும் போது, பாதுகாப்பாக இருக்காது.

எனவே, பழைய பாலத்தை அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ரயில்வே உயா் அதிகாரிகள் கலந்தாலோசித்து முடிவு எடுப்பாா்கள் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, தெற்கு ரயில்வே முதன்மைப் பொறியாளா் குழுவினா் உடனிருந்தனா்.