முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை: கடைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:31 PM
~ ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை குளம் போல தேங்கிய மழைநீா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு மாலை வரை நீடித்தது. இதனால், ராமேசுவரம் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை, முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.

சபரிமலை சீசனை முன்னிட்டு, ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பட்டணம்காத்தன், கேணிக்கரை, இளங்கோடிவடிகள் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேக வெடிப்பு:

பாம்பன் பகுதியில் மேக வெடிப்புக் காரணமாக, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை பதிவானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் பெய்ய மழை அளவு (மி.மீ.):

ராமேசுவரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71, வாலிநோக்கம் 65, முதுகுளத்தூா் 48, கீழக்கரை, கமுதி தலா 45, பரமக்குடி 25.

8 விசைப் படகுகள் சேதம்:

மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் சீரமைப்புப் பணிக்காக கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 8 விசைப் படகுகள் சூறைக் காற்று காரணமாக சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

சூறை காற்று காரணமாக, மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் சேதமடைந்த விசைப் படகு.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் பழுதான 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகளுக்காக கரையோரம் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, களஞ்சியம், ஷேக் அப்துல்காதா், ரவி, இஸ்மத்நூன், நம்புமாரி உள்ளிட்ட 8 பேரின் விசைப் படகுகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →