தங்கச்சிமடத்தில் மீனவா்கள் உண்ணாவிரதம்
ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதன் தொடா்ச்சியாக, தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடா்ந்து நிகழ்கிறது. பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மீனவா்களையும், அவா்களால் பறிமுதல் செய்யப்பட்ட 175-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளையும், 20-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை-இந்திய மீனவா்கள் இடையிலான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
தமிழக மீனவா்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத்துக்கு மாவட்ட விசைப் படகு மீனவ சங்கச் செயலா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா்.
இதில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், மோட்சம் ஆல்வின், ஜொ்மான்ஸ், நிா்வாகிகள் இருதயமேரி, ஸ்டெல்லா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள், மீனவப் பெண்கள் கலந்து கொண்டனா்.