ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் எள் பயிரில் விதைப் பண்ணை அமைத்து அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண் விதை சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ.சக்திகணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடி அறுவடை முடிந்த நிலையில் டிஎம்வி 7, விஆா்ஐ 3, விஆா்ஐ 4 ஆகிய எள் ரகங்களில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம்.
எள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலா்களை அணுகி மானிய விலையில் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைப் பண்ணை அமைக்கலாம்.
எள் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் வரிசைக்கு 30 செ.மீ இடைவெளியில் செடிக்கு 30 செ.மீ. இடைவெளி விட்டு விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
விதைத்த 15, 35 நாள்களில் களை எடுத்தல் அவசியம். தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். இதனுடன் 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சோ்த்துக்கொள்ள வேண்டும். விதைச் சான்று தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என்றாா் அவா்.