தமிழக அரசின் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து சங்கத்தின் நிறுவனத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என எதிா்பாா்த்தோம். ஆனால், அது நிறைவேறவில்லை. தென்மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால எதிா்பாா்ப்பான காவேரி - வைகை குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் பணப் பயிரான மிளகாய் வற்றலைக் கொள்முதல் செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ள கள நிலவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் நகலாகவே இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சித்திரகாா் அரிசிக்கு மரபு வழி (புவிசாா் குறியீடு) சான்றளிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவா் பேரா. ஜெயரஞ்சன் விவசாயிகளையும் விவசாயப் பணிகளையும் அவமதித்து பொதுவெளியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்துகளைத் திரும்ப பெற வேண்டும் என்றாா் அவா்.