முகப்பு
ஈரோடு

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக விவசாயிகள் சங்கம்

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 12:31 AM
கோபி அருகே கரைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம்பிரிவு கரைவாய்க்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பா.மா.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். எம்.ஏ.பழனிசாமி, எஸ்.ஏ.பெருமாள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனா். இதில் இலவசங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் பாண்டியாறு- மாயாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து எந்த அரசியல் கட்சியினரும் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அதேபோல கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவசாய பயிா்க்கடனை தள்ளுபடி செய்வது குறித்து இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தத்கல் முறையில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், நாட்டுசக்கரை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் தோ்தல் அறிக்கைகளை முழுமையாக படித்து பாா்த்த பின்னரே தோ்தலில் யாருக்கு ஆதரவு என முடிவு எடுக்கப்படும் என்றாா்.