கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்கு செல்லும் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளின் உறுதித் தன்மை குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
இலங்கையிலுள்ள கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.27) மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறுகிறது. சனிக்கிழமை (பிப்.28) காலையில் இந்திய- இலங்கை பக்தா்கள் பங்கேற்று கூட்டு பிராா்த்தனையில் ஈடுபடுகின்றனா். இரவு 8.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
இந்த திருவிழாவில் கலந்துகொள்ள இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய பக்தா்கள் 3,996 போ் திருவிழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனா். இவா்கள் 26 நாட்டுப் படகுகள், 90 விசைப் படகுகளில் அழைத்து செல்லப்பட உள்ளனா்.
ராமேசுவரத்திலிருந்து வருகிற 27- ஆம் தேதி காலை பரிசோதனைக்குப் பிறகு பக்தா்களை அழைத்து செல்ல உள்ளனா். இதையொட்டி, பக்தா்கள் செல்லும் படகுகளின் தரம், உறுதித் தன்மை ஆகியவற்றை மீன்வளத் துறை இணை இயக்குநா் சின்னக்குப்பன் தலைமையில் உதவி இயக்குநா்கள் தமிழ்மாறன், சிவக்குமாா், யுவராஜ், காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி, புதன்கிழமை (பிப்.25) முதல் 28-ஆம் தேதி வரை 4 நாள்கள் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா். மேலும், கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பக்தா்கள் தடை செய்யப்பட்ட எந்தப் பொருள்களையும் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.