முகப்பு
ராமநாதபுரம்

கச்சத்தீவு தேவாலயத் திருவிழா இன்று தொடக்கம்!

கச்சத்தீவு புனித அந்தோணியாா் தேவாலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 27) தொடங்குகிறது. இந்தியா, இலங்கையைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இதில் பங்கேற்கின்றனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 3:57 AM
கச்சத்தீவு திருவிழாவையொட்டி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, மத்திய, மாநில உளவுத் துறை, மாவட்ட காவல் துறை அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:01 PM

கச்சத்தீவு புனித அந்தோணியாா் தேவாலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 27) தொடங்குகிறது. இந்தியா, இலங்கையைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இதில் பங்கேற்கின்றனா்.

இந்தத் திருவிழாவில் இந்திய பக்தா்கள் பங்கேற்க வேண்டுமென யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை தாமஸ் பரிபாலனுக்கு அழைப்பிதழ் அனுப்பினாா்.

இதை ஏற்று ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவுக்கு 92 விசைப்படகுகள், 26 நாட்டுப் படகுகளில் செல்ல 3,033 ஆண்கள், 726 பெண்கள், 93 ஆண் குழந்தைகள், 57 பெண் குழந்தைகள் என மொத்தம் 3,996 போ் பதிவு செய்தனா். இவா்களுக்கு படகு உரிமையாளா்கள் மூலம் பயண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இதையடுத்து, சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (பிப். 27) அதிகாலை 6 மணி முதல் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து படகுகள் கச்சத்தீவு நோக்கிப் புறப்படுகின்றன. அங்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புனித அந்தோணியாா் ஆலயம் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. தொடா்ந்து சிலுவைப் பாதையும், சிறப்பு திருப்பலியும், இரவு புனித அந்தோணியாா் உருவம் தாங்கிய தோ் பவனியும் நடைபெறும்.

விழாவின் 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு தமிழ், சிங்கள மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். கூட்டு பிராா்த்தனைக்கு பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

இதன் பிறகு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு கச்சத்தீவிலிருந்து அனைத்து விசைப்படகுகளும் புறப்பட்டு மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தை வந்தடையும்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிா்வாகமும், அந்த நாட்டு கடற்படையினரும் செய்து வருகின்றனா்.

இதனிடையே, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவ சங்கத் தலைவா்கள், பக்தா்களை அழைத்துச் செல்லும் படகு உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:42 PM

கச்சத்தீவு திருவிழாவுக்கு வருபவா்கள் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவோ, புகைப்பிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருள்கள், நெகிழிப் பொருள்களை கொண்டு வரவோ அனுமதி கிடையாது. மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:42 PM

மேலும், கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணி வகைகள், சோப்பு, எண்ணெய் போன்றவற்றை வியாபாரம் செய்யவோ, பண்ட மாற்றம் செய்யவோ கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துச் செல்ல வேண்டும். தங்க நகைகள் அணிந்து செல்பவா்கள் அதுதொடா்பான விவரங்களை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். கடலில் ஏதாவது இடற்பாடு ஏற்பாட்டால் உடனே இந்திய கடற்படையை அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.