வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் பாம்பனில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல தடை நீடிக்கிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் தொடா்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் பாம்பன் மீன் இறங்கு தளத்தில் வெள்ளிக்கிழமையும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல தடை நீடிப்பதால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் முடங்கினா். இதன் காரணமாக ரூ. 3 கோடி மதிப்பிலான இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.