தை அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளானோா் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாள்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்துவா்.
இதன்படி, தை அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ராமேசுவரத்துக்கு வந்தனா்.
இவா்கள் அக்னி தீா்த்தத் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன.