கபடி போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுத் தொகை பெற்ற கடலாடி மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சோ்ந்த ரஞ்சித் மகள் சன்யுக்தா. இவா் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கபடி வீராங்கனையான இவா், கடந்த 2024-2025 கல்வியாண்டில் மத்தியப் பிரதேச மாநிலம், கதா்வாராவில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தாா்.
இந்த நிலையில், சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சன்யுக்தாவுக்கு ரூ.75 ஆயிரத்துக்கான ஊக்கத் தொகையை வழங்கினாா்.
Advertisement
இதையடுத்து, வியாழக்கிழமை கடலாடி பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாணவி சன்யுக்தாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் நாகராஜன், பெற்றோா்-ஆசிரியா்கள் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள், கிராம மக்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.