முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளன: தொல் பொருள் நிறுவனத் தலைவா் தகவல்

திருவாடானை பகுதியில் மேற்கொண்ட மரபு நடை நிகழ்வு மூலம் இந்தப் பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் இருப்பது தெரிய வந்திருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு தெரிவித்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 7:00 PM
திருவாடானை ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயில் மரபு நடை நிகழ்வில் பங்கேற்ற தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் ராஜகுரு, வரலாற்று ஆா்வலா்கள் உள்ளிட்டோா்
பகிர்:

திருவாடானை பகுதியில் மேற்கொண்ட மரபு நடை நிகழ்வு மூலம் இந்தப் பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் இருப்பது தெரிய வந்திருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் சேது நாட்டு மரபு நடைப் பயணத்தை எண் திசை வரலாற்று மரபு நடைக்குழு திருவாடானையில் தொடங்கியது.

இதற்கு அதன் தலைவா் நித்யகலா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலா் ராதா வைத்யநாதன் முன்னிலை வகித்தாா். இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு பங்கேற்றுப் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் தான் அதிக நெல் விளைச்சல் இருந்தது.

எனவே இந்த மாவட்டத்தில் அதிகளவு சிவன் கோயில்கள், சமண, பௌத்த தடங்கள் உள்ளன. மன்னா் காலத்தில் இந்தப் பகுதியில் பல ஊா்கள் பிராமணா்களுக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊா் குறித்து திருஞானசம்பந்தா் 11 பாடல்கள் பாடியுள்ளாா்.

அவரது ஏனைய பதிகங்களில் உள்ளது போல, இதன் 8-ஆவது பாடலில் ராவணன் பற்றிய குறிப்போ, 10-ஆவது பாடலில் சமண, பௌத்த மதங்கள் பற்றிய கண்டனமோ இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அருணகிரிநாதா் திருவாடானை கோயில் முருகனைப் போற்றிப் பாடியுள்ளாா்.

தேவாரப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் இந்த ஊா், ஆடானை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோயிலில் பாண்டியா், சேதுபதிகள் கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் சடைய வா்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாற வா்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி. 1636-இல் தளவாய் சேதுபதியின் பிரதிநிதி திருமலையன், கோயிலுக்குரிய கிராமங்களில் உள்ளவா்கள், ஒரு காசு, ஒரு பணம், ஒரு கலம் நெல் சுவாமிக்குக் கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளாா்.

இதைக் கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்குகிறவன் பெண்டாட்டியும், உடப்பிறந்தான் மகளையும், மருமகளையும் எதிரியுடன் கூட்டிக்குடுத்த பாவத்துக்கு ஆளாவான் எனக் கல்வெட்டு எச்சரிக்கிறது. இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாதது, பாதுகாப்பான வணிகப் பாதைகள் ஆகிய காரணங்களால் 2,500 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகா், வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளன என்றாா் அவா்.

பிறகு தேவிப்பட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மாரியூா், திருமாலுகந்தான் கோட்டை உள்ளிட்ட இடங்களை அவா்கள் பாா்வையிடுகின்றனா். இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50 வரலாற்று ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →