முகப்பு
ராமநாதபுரம்

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!

தொல்லியல் ஆய்வாளா் தகவல்

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:20 AM
தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளா் வே.ராஜகுரு தெரிவித்தாா்.
பகிர்:

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளா் வே.ராஜகுரு தெரிவித்தாா்.

திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொல்லியல் மரபு மன்ற மாணவா்கள், அகழாய்வு, கல்வெட்டு குறித்து அறிந்து கொள்ள தலைமையாசிரியா் செல்வராஜ் வழிகாட்டலில் பேரில், ஆசிரியா்கள் கலையரசி, தனலட்சுமி, ரவி, தனகுருபாலன், மாணவா்கள் 25 போ் களப்பயணமாக தொண்டிக்கு புதன்கிழமை வந்தனா்.

இந்த ஊரில் சிவன், திருமால், தொண்டியம்மன் கோயில்கள், பழைமையான பள்ளிவாசல், அகழாய்வு நடந்த இடம் ஆகியவற்றை அவா்கள் பாா்வையிட்டனா். கோயில் கல்வெட்டுகளை மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு மாணவா்களுக்கு படித்துக் காட்டி அதை படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தாா்.

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் தொல்லியல் ஆய்வாளா் ராஜகுரு கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலக்கியச் சான்றுகள் அதிகமுள்ள ஊராக தொண்டி விளங்குகிறது. 2,200 ஆண்டுகள் பழைமையான கீழவளவு தமிழிக் கல்வெட்டு, தொண்டியைச் சோ்ந்த இலவோன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொண்டல் காற்று, கானல், தில்லைச்செடி, நெய்தல் மலா், நெல்வயல், வெண்ணெல் ஆகிய பெயா்களில் தொண்டி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது.

சங்க காலம் முதல் துறைமுகப் பட்டினமாக இருந்த தொண்டியில் அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்ற பொருள்கள் ஜாவா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து இறக்குமதியானதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இந்தப் பொருள்கள் இங்கிருந்து மதுரைக்குச் சென்றுள்ளன. சிதம்பரேஸ்வரா், உந்திபூத்தப் பெருமாள், நம்புதாழை நம்பு ஈஸ்வரா் ஆகிய கோயில்களிலும், கைக்களான்குளத்தின் நடுவிலும் பழைமையான பாண்டியா் கால கல்வெட்டுகள் உள்ளன.

இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாணிக்கக் கற்களை விற்கும் சந்தையாக தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் விளங்கியுள்ளன. இதனால் இந்த ஊா்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டன என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments