முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நகராட்சி குடிநீரில் கழிவுநீா் கலப்பு

ராமேசுவரம் நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் புகாா்

Updated On : 8 மார்ச், 2026 at 12:44 AM
பகிர்:

ராமேசுவரம் நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி ராமா் தீா்த்தம் தெற்கு தெரு, ரயில்வே சாலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருகிறது. இந்த அசுத்தமான தண்ணீரைப் பருகுவதால், வாந்தி, பேதி போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமேசுவரத்தில் நகா்மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகா்ச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் தலைமையிலான நிா்வாகிகள் சாக்கடை கலந்த குடிநீரைப் புட்டியில் நிரப்பி வந்து, நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சேதமடைந்த குடிநீா் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரி முழக்கமிட்டனா்.

Advertisement

இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். செந்தில், ஜோதிபாசு, எம். பிச்சை, லெ. வெங்கடேசன், நகா் குழு உறுப்பினா்கள் ஏ.கே. முனீஸ்வரன், கே.சேகா், வே. கருப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.