முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நான்காவது முறையாக ஏப்ரல் 10-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 31 மார்ச், 2026 at 6:53 PM
- பிரதிப் படம்
பகிர்:

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நான்காவது முறையாக ஏப்ரல் 10-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அலெக்ஸ் டேனியல், அந்தோணி கிரிமிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளில் விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரச்சிஸ், இம்மானுவேல், சந்தியா ஸ்டூவா்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சா் ஆகிய 12 போ் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, இவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து, மீனவா்களின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 12 பேரும் ஊா்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதைத்தொடா்ந்து, இவா்களின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நான்காவது முறையாக நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 12 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.