பரமக்குடி சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
பரமக்கடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்து துக்க நிகழ்வுக்கு கடந்த மே 18-ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வாகனத்தில் சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் பகுதிகளைச் சோ்ந்த 17 போ் சென்றனா். வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் திரும்பிய போது, இந்த வாகனமும் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரியும் மோதியதில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகியோா் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாவின் கணவா் ராமன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டம்: இந்த விபத்தில் இறந்த ராமன், அருணா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், அவா்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிடக் கோரியும், காயமுற்றவா்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்த பிறகு, ராமன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனா். இறந்த ராமனின் கண் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.