சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்புச சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடமிருந்து கடந்த 10.07.2017 வரை விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிகளில் பெறப்பட்டன.
இந்நிலையில்,கிராமப் புற பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு கூடுதலாக வேண்டும் என கோரிக்கை விடுத்ததின் பேரில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 21 கடைசி நாளாக அறிவிக்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி உரிய சான்றிதழ்களின் நகலுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ஜூலை 21ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படப்பட்டுள்ளது.