ஆசிரியர் பணி மகத்தானது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந் தர் சொ. சுப்பையா பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2017-2018 -ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் மாணவர்களுக்கு திங்கள்கிழமை புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
விழாவில் தலை மை வகித்து துணைவேந்தர் பேசியதாவது: இளைஞர்களை பொறுப்புள்ள குடிமக்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் தினம், தினம் புதுப்புதுச் செய்திகளை தெரிந்துகொண்டு தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். புதுப்புதுத் தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அவற்றை கற்பித்தலில் பயன்படுத்தவேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை தயார் செய்யவேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களின் தேவையறிந்து உதவிசெய்வதோடு தியாக மனப்பாண்மையோடும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கே. குருநாதன், கல்வியியல் புல முதன்மையர் சிவகுமார், ஆராய்ச்சி முதன்மையர் டிஆர். குருமூர்த்தி, வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கே. உதயசூரியன், தேர் வாணையர் குருமல்லேஷ்பிரபு மற்றும் பேராசிரியர்கள் பலரும் பேசினர்.
முன்னதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி. பாலச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். மாணவர் நலன் முதன்மையர் வி. பழனிச்சாமி நன்றி கூறினார்.