சிவகங்கையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
இந்தக் கலந்தாய்வு மூலம் 11 பேர் வெளிமாவட்டத்துக்கும், 9 பேர் உள்மாவட்டத்திலும் பணியிட மாறுதல் ஆணை பெற்றனர்.
இதேபோன்று, சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட பொதுமாறுதல் கலந்தாய்வு, மாவட்டக் கல்வி அலுவலர் என். பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. இதில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், பணியிட மாறுதல் வேண்டி 8 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில், விதிமுறைப்படி சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 4 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றனர். மீதமுள்ளவர்கள் பணியிட மாறுதல் பெறவில்லை.
மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில், பணியிட மாறுதல் கோரி 5 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே பணியிட மாறுதல் பெற்றார்.