சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானாமதுரை பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கே. தங்கமணி, ஒன்றியச் செயலர் கே. ஆறுமுகம், நகரச் செயலர் கருப்புச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் சங்கையா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.