மானாமதுரை வைகையாற்றில் இன்று அழகர் இறங்குகிறார்
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை காலை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை காலை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் இரவு வீரழகர், பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு பெருமாள் அனுமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். சனிக்கழமை இரவு கள்ளழகர் வேடம் பூண்டு பூப்பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்த அழகரை, எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தியாக விநோதப் பெருமாள் கோயிலிலுக்கு அழகர் சென்றடைந்தார்.
திங்கள்கிழமை காலை 4 மணிக்கு இங்கிருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 6 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பு ஆற்றுக்குள் இறங்குகிறார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வைகை ஆற்றுக்குள் கூடியுள்ளனர்.
சித்திரைத் திருவிழா நிறைவு: மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாண உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமையும் தேரோட்டம் சனிக்கிழமையும் நடைபெற்றது.
இரவு அம்மனும் சுவாமியும் சப்பரத்தில் புறப்பாடாகி தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஞாயிற்றுக்கிழமை சோமநாதர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.
இரவு ஆயிரவைசிய காசுக்கார செட்டியார்கள் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினர். திங்கள்கிழமை சந்தனக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது.