சிவகங்கையில் சாலையை சீரமைக்கக் கோரி வழக்குரைஞர்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமாக காணப்படும் இச்சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்காததால் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியலுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை (பிப். 21) சிவகங்கை வட்டாட்சியர் கந்தசாமி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உரிய தீர்வு எட்டப்பட வில்லையாம்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை இக்கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, மாவட்டச் செயலர் குரு.தங்கப்பாண்டியன், பொருளாளர் வசந்தகுமார், துணைச் செயலர் இளையராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சி செல்லும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் என்பவர் இயக்கினார். அந்தப் பேருந்தை வழக்குரைஞர் குரு.தங்கப்பாண்டியன் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அவர் கீழே விழுந்தார். இதனால், லேசான காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனையறிந்த மற்ற வழக்குரைஞர்கள், பேருந்து ஓட்டுநர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் செல்வராஜ் மீது தாக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்த போலீஸார், செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.