சிவகங்கை

மானாமதுரையில் மணல் குவாரிகள் அமைக்க அரசு தீவிரம்: 50 குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்: போராட்டத்தை தீவிரப்படுத்த அனைத்துக் கட்சியினர் முடிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் 3 மணல் குவாரிகளை அமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து

வி. கருப்பையா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் 3 மணல் குவாரிகளை அமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இங்கு செயல்பட்டு வரும் 50 குடிநீர் திட்டங்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அனைத்துக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் 50 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மானாமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் மானாமதுரை பகுதி வைகை ஆற்றிலிருந்துதான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை ஒன்றியத்தில் மணல் வளம் நிரம்பியுள்ள செய்களத்தூர், வாகுடி, தெ.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வைகையாற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்றுகள் பெறப்பட்டுள்ளன.
அரசு மணல் குவாரிகள் அமைக்க மானாமதுரை பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்துக்கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒருங்கிணைந்து குவாரிகள் அமைப்பதற்கான எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளனர். போராட்டக்குழுவினர் குவாரிகள் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவகங்கை சார் ஆட்சியர் ஆஷா அஜித் சில நாட்களுக்கு மானாமதுரை பகுதி வைகையாற்றுக்கு வந்து குடிநீர் திட்டங்கள் செயல்படும் இடங்களை பார்வையிட்டுச் சென்றார்.
மணல் குவாரி: இந்நிலையில் மானாமதுரை பகுதியில் தெ.புதுக்கோட்டை கிராமத்தில் முதல்கட்டமாக மணல் குவாரி அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகுடி, செய்களத்தூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குவாரிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மானாமதுரை பகுதியில் ஒரே நேரத்தில் 3 குவாரிகளையும் தொடங்க அரசு தீவிரம் காட்டியது. இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முதற்கட்டமாக தெ.புதுக்கோட்டையில் மட்டும் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க , குவாரியை விரைந்து அமைக்குமாறு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் திட்டமிட்டபடி மானாமதுரை பகுதியில் 3 இடங்களில் மணல் குவாரிகள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டு மணல் விற்பனை தொடங்கியிருக்கும் என பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்த அனைத்துக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT