தந்தையின் சடலத்தை எடுத்து வந்தபோது விபத்து: மகன் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் சடலத்தை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் சடலத்தை வீட்டுக்கு எடுத்து வந்தபோது, ஏற்பட்ட விபத்தில் மகன் பலத்த காயமடைந்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் சிவா (25). இவரது தந்தை செல்வம், சிறுநீரக பாதிப்பு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர், உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிவா தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்துகொண்டிருந்தார்.
திருக்கோஷ்டியூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே இருந்த பேரிக்கார்ட்டில் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.