திருப்புவனம் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செளந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செளந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் காமதேனு, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். 8-ம் நாளான புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. 9-ம் நாளான வியாழக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு புஷ்பவனேஸ்வரர் மற்றும் செளந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேருக்கு எழுந்தருளினர். காலை 10 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.
கீழ் ரத வீதி, தினசரி சந்தை வளாகம், மதுரை - ராமேசுவரம் சாலை, சந்தை திடல் உள்ளிட்ட வீதிகளில் வலம் வந்த தேர் நண்பகல் 11.50 மணியளிவில் நிலைக்கு வந்தது.
விழாவில், திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, வெள்ளிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.