அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்துள்ளது குறித்து ...
புது தில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, இரண்டாவது மாதமாக வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.
இந்த அதிரடி விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஐந்து மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை உயர்த்தப்படவில்லை.
Advertisement
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.
இந்த நிலையில், மே மாதத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.2,031-க்கு விற்பனையான சிலிண்டர் விலை ரூ.3,024-ஆகவும், புதுதில்லியில் ரூ.3,071.50 ஆகவும் விற்பனையாகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் 19 கிலோ வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. முதலில் மார்ச் மாதம் ரூ.144 உயர்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.200 உயர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் அதிரடியாக ரூ.993 உயர்த்தப்பட்டதை அடுத்து வர்த்தக சிலிண்டர் விலை தற்போது புதிய உச்சம் அடைந்துள்ளது.
மாற்றமில்லாத வீட்டு உபயோக சிலிண்டர்
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஐந்து மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை உயர்த்தப்படவில்லை.
கடந்த மார்ச் 7-ஆம் தேதி, பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் இதன் விலை ரூ.928.50-ஆகவும், தில்லியில் ரூ.913-ஆகவும் நீடிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடர்கிறது. தற்போது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.72 ஆகவும், டீசல் விலை ரூ. 87.62 ஆகவும் உள்ளது.
விமான எரிபொருள் விலைகளிலும் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கல் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிரடியாக சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
வர்த்தக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உணவுகளின் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.