சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 12 வருடங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை
தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகத்திருவிழாவில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் 12 வருடங்களாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால், நிலைத்தெப்பம் மூலம் உற்சவம் நடத்த முடிவு செய்துள்ளனர். வைகாசி விசாகத்திருவிழா மே 19-இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் ஐம்பெரும் கடவுள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருத்தளிநாதர் ஒரு தேரிலும் சிவகாமி அம்மன் ஒரு தேரிலும் விநாயகர் ஒரு தேரிலும் எழுந்தருளுகின்றனர். மாலை 4 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு திருத் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.