சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (அக். 13) பொது விநியோகக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோக நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அந்தந்த வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம்- ஒக்கூர், மானாமதுரை வட்டம்- கரிசல்குளம், இளையான்குடி வட்டம்- கோட்டையூர், காரைக்குடி வட்டம்- ஆலம்பட்டு, தேவகோட்டை வட்டம்- புளியால், திருப்பத்தூர் வட்டம்- கம்பனூர், திருப்புவனம் வட்டம்- மடப்புரம், காளையார்கோவில் வட்டம்- கொல்லங்குடி, சிங்கம்புணரி வட்டம்- மருதிப்பட்டி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.