சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவாய்த்துறை, தொழிலாளர் நலத் துறை,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 492 பயனாளிகளுக்கு ரூ.4,72,70, 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.