திருப்பத்தூர் அருகே கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கக்காட்டிருப்பு பகுதியில் உள்ள குருக்கேஸ்திர கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கக்காட்டிருப்பு பகுதியில் உள்ள குருக்கேஸ்திர கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் ஒன்றியம் கக்காட்டிருப்பு பகுதியில் பாலாறு மற்றும் மணிமுத்தாற்றினை இணைக்கும் பாசன வாய்க்கால் பகுதி உள்ளது. இதில் தற்போது கருவேல மரங்கள் வளர்ந்து நீர்வரத்திற்குத் தடையாக உள்ளது. இருப்பினும் கக்காட்டிருப்பு கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் ஆற்றுப்பகுதியை தூர்வாரி உள்ளனர். ஆனால் மடைப்பகுதி மற்றும் வயல்களுக்குச் செல்லும் பாசன வாய்க்கால் பகுதியை ஒரு சிலர் ஆடுகளை கட்டி வைத்து பராமரிக்கும் இடமாக மாற்றி நீர்வரத்தினை தடைசெய்துள்ளனர். மேலும் அருகில் உள்ள குருக்கேஸ்திர கண்மாய் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பினை அகற்றக் கோரி கிராமத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து கக்காட்டிருப்பு, இலுப்பகுடி, மேலப்பட்டமங்கலம், தரியம்பட்டி, மருதினிக்கண்மாய் உள்ளிட்ட ஏராளமான இடங்களுக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரம்புவது வழக்கம். இத்தண்ணீர் மூலம் இருபோகம் விளையும் என்று இக்கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் முன்வந்து பாலாறு, மணிமுத்தாறு பகுதி ஆற்றுப் படுகைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் கக்காட்டிருப்புப் பகுதி விவசாயத்தில் செழிக்க வாய்ப்புள்ளது.