ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதுபற்றி ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில்,
Advertisement
"தேர்தல்களுக்குப் பிறகு பணவீக்கத்தின் வெப்பம் தாக்கும் என்று நான் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.
இன்று வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 993 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் விலை உயர்ந்துள்ளது இதுவே ஆகும்.
பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை ரூ. 1,380 உயர்ந்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% அதிகரித்துள்ளது.
தேநீர் கடைகள், சாலையோர உணவகங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் என ஒவ்வொரு சமையலறையும் இந்த நெருக்கடியால் திணறுகின்றன. இதன் தாக்கம் உங்கள் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்.
முதலில் எரிவாயுவின் மீது தாக்குதல், அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளார்.