வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் குறித்து...
சென்னை: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பொது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் ஒட்டுமொத்த பண வீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு விலையை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வரும் போக்கு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பொது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகப் பெற வேண்டும்.
அதேவேளையில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் மின் வெட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டு பொது மக்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பராமரிப்பு பணிகள் அல்லது பிற காரணங்களால் மின்சாரம் துண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், குறைந்தபட்சம் பொது மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கும் நடைமுறையை மின்சார வாரியம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 11 ஆம் தேதி முதல்வர் விஜய் தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் போது சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், தமிழ்நாடு சார்பில் மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Hike in domestic LPG prices: Premalatha Vijayakanth condemns the move
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.